யுத்தநாள்-2 சர்வாயுதவர்க்கம் 🛡🗡
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர,சகோதரிகளே..பிதாவின் அன்பும்,நம் இரட்சகரான இயேசு கிறிஸ்து தரும் சமாதானமும்,பரிசுத்த ஆவியானவர் தரும் ஐக்கியமும்,விசுவாசமும் சதாகாலங்களும் உங்களனைவரோடும் இருப்பதாக-ஆமென்।
என்னுடைய கடந்த பதிவினை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்,அதன் தொடர்சியை எனது அடுத்த பதிவில் பதிவிடுவேன் என்று சொன்னேன் அல்லவா! சரி,வாருங்கள் இன்று கிறிஸ்துவின் ஆவியானவர் நமக்கு அளிக்கும் போராயுதங்களை குறித்த காண்போம்,முதலாவது நீங்கள் அனைவரும் பிசாசுடனான நமது ஆவிக்குரிய யுத்தத்திற்கு தயாரா என்று சுயசோதனை செய்துபாருங்கள்,தயாராக உள்ள அனைவரும்,சர்வாயுதவர்க்கங்களை தரித்துகொள்ளுங்கள்,தகுதிபடாதவர்களோ உங்களை தேவனுக்கென்று ஒப்புகொடுத்து தகுதி படுத்திக்கொள்ளுங்கள் இதை தான் பரிசுத்த பவுல் பின்வருமாறு எபேசு பட்டணத்தாருக்கு எழுதியுள்ளார்
"நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்".
எபேசியர் 6:11
'போர்' அல்லது 'யுத்தத்தில்' எதிரியை நாம் மேற்கொள்ள தரமான ஆயுதங்கள் அவசியம் அல்லவா? இன்று நம்மை திராணியுள்ளவர்களாக்கும் அந்த சர்வாயுதங்கள் என்னென்ன என்று தியானிக்கலாம்.
1.சத்தியம்
" சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; "
எபேசியர் 6:14
முதலில் சத்தியம் என்னும் கச்சையை அறிய வேண்டும்,பிசாசு பொய்க்கு பிதாவாக இருக்கிறான் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம்,ஆதிமுதலாய் அவன் பொய் வசனிப்பால் நம்மை இயேசுவொடு உள்ள உறவில் நிலைக்கவிடாமல் முறித்து போடுகிறான்,எனவே சத்தியத்தை தரித்துக்கொள்ள வேண்டும்.சத்தியத்தால் உண்டாகும் நீதி நமது இதயத்தை காக்கும் மார்கவசமாய் நம்மை அழிவில் இருந்து இரட்சிக்கும்.
2.சுவிசேஷ ஆயத்தம்
"சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்";
எபேசியர் 6:15
யுத்தத்திற்கு வெளியே புறப்படும் போது பாதரட்சையை தொடுத்து செல்வது போல,கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு எந்த வேளையிலும் ஆயத்ததோடு,அதை சமாதானத்தோடு ஏற்றுகொள்ளவேண்டும்.
3.விசுவாசம்
"பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்".
எபேசியர் 6:16
பொல்லாங்கனாகிய பிசாசு எய்யும் அக்கினியாஸ்திரங்களான அவிசுவாசம்,மூர்க்கம்,இருதய கசப்புகள்,வீண் கோபம்,பொறாமை,சமாதான குளச்சல்,பாவ சிந்தை முதலான காரியங்களில் சிக்குண்டு மனமடிவடைந்து,தேவனை மறுதலித்துவிடாமல் இறுதிவரை நிலைநிற்க,விசுவாசத்தை கேடகமாக பிடித்து,அவனை வெட்க்கபடுத்தி ஓட செய்யவேண்டும்.
4.பட்டயமும்,தலைச்சீராவும்
"இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்".
எபேசியர் 6:17
இதுவரை தற்காப்புக்கென்று உள்ள ஆயுதங்களை பார்த்தோம்,இப்போது பிசாசை எதிர்த்து நின்று நிர்மூலமாக்கும் ஆவியின் பட்டயமாகிய தேவ வசனத்தை எடுத்து கொள்வோம்,நாள்தோறும் வேதம் வாசித்து,தியானித்து ஜெபத்திலும்,கர்த்தரை துதிப்பதிலும் நிலைத்திருக்கும் வரை,பிசாசின் அரண்கள் அனைத்தும் நிர்மூலமாகிக்கொண்டே இருக்கும் ।கர்த்தர் நல்லவர்;அவர் கிருபை என்றுமுள்ளது என்று தினந்தோறும் கர்த்தரை துதியுங்கள்,ஆவிக்குரிய நமது யுத்தத்தை தேவன் நடத்துவார் நாமோ 'சும்மா' இருப்போம்.கர்த்தர் சமுகத்தில் அமர்ந்திருக்க கற்கொள்ளுவோம்.
ஆமென்!!! அல்லேலூயா!!!🤗😇
Comments
Post a Comment